சென்னை: பிரமாண்டமான சென்னை அறிவியல் திருவிழா இன்று அறிவியல் கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்களுடன் தொடங்குகிறது. இதில் பொம்மலாட்டம், தெருக்கூத்து நிகழ்ச்சிகள், வில் அம்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கருத்துகளை விளக்கும் நாட்டுப்புற பாடல்களும் இடம்பெறும். இதுகுறித்து, தமிழக அரசின் அறிவியல் நகரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

உயர்கல்வித் துறையின் ஒரு பகுதியாக செயல்படும் அறிவியல் நகரம், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே அறிவியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சென்னை அறிவியல் திருவிழா 2008 முதல் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), இந்திய மருத்துவ இயக்குநரகம், புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இவ்விழாவில் பங்கேற்று அறிவியல் படைப்புகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சென்னை அறிவியல் திருவிழா சென்னை கிண்டியில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) இன்று முதல் 28-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் பிரமாண்ட அறிவியல் கண்காட்சி அரங்குகள், அறிவியல் செயல்விளக்கம், பொதுமக்களுக்கு அறிவியல் கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் பொம்மலாட்டம், தெரு கூத்து, வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.