இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:- கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி நடத்திய தெரு நாய் கணக்கெடுப்பில், சுமார் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய் இனக் கட்டுப்பாட்டு மையங்களை மாநகராட்சி தற்போது இயக்கி வருகிறது.
கடந்த ஆண்டு, 14,678 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு, இதுவரை 9,302 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின்படி, பொதுமக்களை வெறிநாய்க்கடி பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கவும், வெறிநாய்க்கடி இல்லாத சென்னை நகரத்தை உருவாக்கவும், அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்பட்டது. fதடுப்பூசி

அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற குடற்புழு நீக்க முகாம் நேற்று மணலி மண்டலம், மாத்தூரில் உள்ள எம்எம்டிஏ பூங்காவில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர். பிரியா பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு முகாம் 3 மண்டலங்களில் தலா 10 குழுக்கள் மூலம் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு சுமார் 100 தெருநாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில், 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு சுமார் 3,000 தெருநாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் 60 நாட்களுக்குள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப. ஜெயசீலன், வடக்கு மண்டல துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ. சாந்த குமாரி, தலைமை கால்நடை மருத்துவர் கமல் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.