சென்னை: ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் கல்விக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என என்டிஏ அறிவித்துள்ளது. நம் நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் கல்விப் படிப்புகளில் சேர, தேசிய பொது நுழைவுத் தேர்வில் (NCET) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://exams.nta.ac.in/NCET/ என்ற இணையதளத்தின் மூலம் மார்ச் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கால அவகாசம் வழங்கப்படும். என்சிஇடி நுழைவுத் தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் கணினி மூலம் நடத்தப்படும்.
இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஹால் டிக்கெட் வெளியீடு, விண்ணப்ப நடைமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 011-4075 9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது ncet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தெளிவுபடுத்தலாம் என்று NTA தெரிவித்துள்ளது.