சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதை ஒட்டி, பலர் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எளிதாக சார்ஜ் செய்யும் வசதியை ஏற்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகளில் 25 கி.மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையமும், நகரங்களில் 3 கி.மீட்டருக்கு ஒரு மையமும் அமைக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 100 துணை மின் நிலையங்களில் உள்ள காலி இடங்களில் சார்ஜிங் மையங்களை அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முதலில் முடிவு செய்தது. ஆனால், நிதி நெருக்கடி மற்றும் பிற காரணங்களால், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது பசுமை மின் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்சார வாரியத்தின் துணை நிறுவனமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து பசுமை ஆற்றல் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் மாநகராட்சியுடன் இணைந்து 100 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதேபோல், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் தலா 5 முதல் 10 சார்ஜிங் சென்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ”பிரதான நகரங்களில், பொது சார்ஜிங் சென்டர் அமைக்க, போதிய இடவசதி கிடைப்பது கடினம். எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில், சார்ஜிங் சென்டர் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.