கடந்த 2024-25-ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து அகில இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து 3-வது ஆண்டாக 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்:-
அகில இந்திய அளவில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் மாநிலங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 2024-25-ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து அகில இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து 3-வது ஆண்டாக 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில், குஜராத் 28,286.47 மெகாவாட் சூரிய மின் உற்பத்தியில் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 10,687.27 மெகாவாட் மின்சாரத்துடன் 2-வது இடத்திலும் உள்ளது.

மத்திய அரசின் சூரிய ஒளி மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கடந்த ஓராண்டில் பிரதமரின் சூரிய மின் உற்பத்தி திட்டத்தில் 23,500 நுகர்வோர் இணைந்துள்ளனர். இதன் மூலம் 125 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘பிரதம மந்திரி சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில், 2028-க்குள், 3 லட்சம் நுகர்வோரை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, 850 விற்பனையாளர்களுக்கு, சோலார் பேனல்கள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.