கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விசிக வன்னியரசு ராமன் மற்றும் சனாதன தர்மம் குறித்த கருத்துக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டார். ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல், ராமனையும் சனாதன தர்மத்தையும் காரணம் என வன்னியரசு கூறியிருப்பது ஏற்க முடியாதது என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் இந்து மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைத்துள்ள உலக ஐயப்ப மாநாட்டில் பங்கேற்பதை கேள்வி எழுப்பினார். இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் முதல்வரின் செயல்கள் உள்ளன என்றும் தமிழிசை கூறினார்.
ராமன் சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை போற்றுபவர் என்றும், கம்பராமாயணத்தில் அதற்கான பல உதாரணங்கள் உள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவராதது திமுக அரசின் தவறு என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையே காரணம் என்றும் தமிழிசை சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் ராமனை வணங்குபவர்களின் ஓட்டுகள் வன்னியரசுக்கு செல்லக்கூடாது என்றும், பாஜக சார்பில் கம்பராமாயணம் புத்தகங்களை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஒரு தமிழரை அறிவித்தபோதும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரிக்க மறுத்தது தமிழ் பற்று எனும் முகமூடியை களைந்துவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.