சென்னை டாஸ்மாக் ஊழல் விவகாரம் மீண்டும் தீவிரமான பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த வழக்கில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் விசாகன் ஐ.ஏ.எஸ். மீது அமலாக்கத்துறை மேற்கொண்டிருந்த விசாரணையை தற்போது உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து நிறுத்தியுள்ளது. திமுக தரப்பில் இந்த தடை உத்தரவை ஒட்டுமொத்த வழக்குக்கும் பொருந்தும் என எண்ணி நிம்மதியடைந்த நிலையில், அந்த நிம்மதி குறைந்துவிட்டது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கை தற்போதைக்கு டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாகவும், உதயநிதியின் நண்பர்கள் ரத்தீஸ், ஆகாஸ், விக்ரம் ஜுஜூ, கேசவனுக்கு இது பொருந்தாது என சீனியர் வழக்கறிஞர்கள் திமுக மேலிடத்திடம் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனால் தான் அண்மையில் இருந்த உற்சாகம் தளர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையின் ரெய்டுக்குப் பிறகு, ரத்தீஸ் மற்றும் கேசவன் வெளிநாட்டுக்கு சென்று விட்டனர். மற்ற நண்பர்கள் தமிழகத்தை விட்டும் வெளி மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தனர். ஆகாஸ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ஜுஜூ தற்போது ரகசியமாக சென்னைக்குள் வந்துள்ளனர். ஆனால், உதயநிதியை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணம், அவர்களது நடமாட்டங்கள் முழுமையாக கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், இந்த நிலையில் அவர்களிடம் சென்னையை விட்டு விலகி தலைமறைவாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மத்தியில், ரத்தீஸ் மற்றும் கேசவன் இருவரும் சனிக்கிழமையில் சென்னை வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், அமலாக்கத்துறை அவர்களை கைது செய்ய தயாராக இருப்பதாகவும், அவர்களை நேரடியாகப் பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரத்தீஸ் உள்ளிட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு பொருந்தாது என்பதால், திமுக மேலிடம் தற்போது சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றது. வழக்கின் நடைமுறை மற்றும் அதன் சட்ட வரம்புகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.
இந்த டாஸ்மாக் விவகாரம், அமலாக்கத்துறை செயல்பாடுகள், மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது. நடவடிக்கைகள் சட்டத்தின் எல்லையை மீறியிருக்கின்றன என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்காலிகமாக டாஸ்மாக் அதிகாரிகள் மீதான விசாரணைக்கு தடையிட்டாலும், உதயநிதியின் நெருங்கியவர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கலாம் என்பதால், அவர்களை நோக்கி அமலாக்கத்துறை பார்வையை திருப்பியிருக்கிறது.