தஞ்சாவூர்: தஞ்சை மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து மனதை வென்றுள்ளார் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன். தான் சொன்ன சொல்லை நிறைவேற்றி பாராட்டுக்களை குவித்து வருகிறார். விடுமுறை நாட்களில் சிவகங்கை பூங்காவில் குழந்தைகளின் கூட்டம்தான் பூந்தோட்டத்தில் வண்ணத்து பூச்சிகள் போல் நிறைந்து காணப்படுவதே இதற்கு சாட்சி.
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என தஞ்சாவூர் அழைக்கப்படுகிறது. தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தையும், அதன் தொன்மையையும் தஞ்சை தாங்கி நிற்கிறது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கிறது. இந்த அற்புத கட்டிக்கலையை காண ஏராளமான வெளிநாட்டினர் தஞ்சைக்கு வருவது உண்டு.
தஞ்சை பெரிய கோவில், சிவகங்கை பூங்கா, தஞ்சாவூர் அரண்மனை, சரஸ்வதி மஹால் நூலகம், ராஜ இராஜன் மணிமண்டபம், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் போன்றவை தஞ்சாவூரில் கட்டாயம் காண வேண்டிய இடங்கள் ஆகும்.
இதில் குறிப்பாக தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே அமைந்துள்ள சிவகங்கை பூங்கா, தஞ்சை மக்களின் விருப்பமான பொழுது போக்கு இடமாக உள்ளது. இந்த பூங்கா ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழமையான பூங்கா. 1871-72ம் ஆண்டு காலகட்டத்தில் தஞ்சாவூர் நகராட்சியால் (அப்போது) சிவகங்கை பூங்கா அமைக்கப்பட்டது. சுமார் 20 ஏக்கரில் இது அமைந்துள்ளது. சிவகங்கை பூங்காவில் குழந்தைகளுக்கு பிடித்தமான படகு சவாரி, நீச்சல் குளம், ரயில், நீர்சறுக்கு விளையாட்டுகள் இருந்தன.
இந்த நிலையில் 150 ஆண்டுகள் பழமையான சிவகங்கை பூங்கா தற்போது ஸ்மார்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு புது பொலிவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகளுக்காக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல்1 அன்று பூங்கா மூடப்பட்டது. பல்வேறு காரணங்களால் தாமதப்பட்டு வந்த இப்பணிகளை மேயர் ஆனவுடன் சிறந்த முறையில் செய்து சிவகங்கை பூங்காவை திறந்தார் மேயர் சண்.ராமநாதன். மாநகராட்சி தேர்தலின் போதும் முதல்கட்டமாக சிவகங்கை பூங்கா திறக்கப்படும் என்று தெரிவித்தார். அதை நிறைவேற்றியும் விட்டார். சுமார் 4 ஆண்டுகளாக சிவகங்கை பூங்கா திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் சிவகங்கை பூங்காவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, சிவகங்கை பூங்கா கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி திறக்கப்பட்டது. நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
பச்சை பசுமை புல்வெளிகள் கண்ணை பறிக்கும் வகையில் அமைந்துள்ளன. பழமையான பெரிய மரங்கள், குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு ரயில், சறுக்கு மரம், ராட்டினம் என பல குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பாதுகாப்பு வசதிகளுடன் தரமானாதாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றில் விளையாடி மகிழ தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வருகின்றனர். மேலும் பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் வந்து குவிகின்றனர்.
இதுமட்டுமா? கதை முற்றம், நீச்சல்குளம், குழந்தைகள் தனியாக சிறிய படகில் அமர்ந்து செயற்கை தண்ணீர் குளத்தில் உலா வருவது என்று ஏகப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் மக்களின் நீண்ட நாள் ஏக்கத்தை போக்கியுள்ளார் மேயர் சண்.ராமநாதன். இப்போது மக்கள் வெள்ளத்தில் பூங்கா நிறைந்து காணப்படுகிறது.
இந்த வசதிகள் மட்டுமின்றி மேலும் பல வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. புதிய மேம்படுத்தப்பட்ட நீர் விளையாட்டுகள் வர உள்ளன. இதனால் , தஞ்சை நகர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான இடமாக சிவகங்கை பூங்கா உள்ளது. பூங்கா நுழைவுகட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: மேயராக பதவியேற்ற உடன் முதல் பணியாக சிவகங்கை பூங்கா திறக்கப்படும் என்று கூறியதை நிறைவேற்றி உள்ளோம். தற்போது மக்களின் சிறந்த பொழுது போக்கு இடமாக சிவகங்கை பூங்கா மாறியுள்ளது. குழந்தைகளுக்காக சிறப்பான, தரமான பாதுகாப்பு வசதிகள் கொண்டு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அமைதியாக உட்கார்ந்து குடும்பத்தினருடன் பேசி மகிழ இளைப்பாறும் பகுதிகள், கதை முற்றம், நீச்சல் குளம் ஆகியவை சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த சிவகங்கை குளத்திற்கு கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டுள்ளது. மக்களின் மனநிறைவு பூங்காவிற்கு வரும் கூட்டத்தை பார்த்தாலே தெரியும். தஞ்சை மாநகரில் சிறந்த பொழுதுபோக்கு இடமாக சிவகங்கை பூங்கா மாறியுள்ளது. மேலும் புதிதாக நீர் சறுக்கு விளையாட்டுகளும் வர உள்ளன. நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் மாலை நேரத்தில் சிவகங்கை பூங்காவிற்கு வருகின்றன. சொன்னதை நிறைவேற்றிய திருப்தி எங்களுக்கும் உள்ளது. மக்களுக்கும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.