மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது பாதையின் ஒரு பகுதியாக, சேத்துப்பட்டு முதல் கீழ்ப்பாக்கம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் 116.1 கி.மீ தூரத்திற்கு 3 பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பாதைகளில் ஒன்று மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான மூன்றாவது பாதை. இந்த 45.4 கி.மீ தூரத்தில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதன் ஒரு பகுதியாக, சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரையிலான 2.8 கி.மீ சுரங்கப்பாதை கட்டுமானம் செப்டம்பர் 2023-ல் தொடங்கியது. முதலில், சிறுவாணி என்ற சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் பணியில் ஈடுபட்டது.

இந்த இயந்திரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியை முடித்தது. இதேபோல், சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரமான பாலாறு அக்டோபரில் அதே பாதையில் தனது பணியை முடித்தது. இதற்கிடையில், சேதுபட்டு முதல் கீழ்ப்பாக்கம் வரையிலான சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இந்தப் பணிக்காக பவானி மற்றும் தாமிரபரணி ஆகிய சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறியதாவது:- சேத்துபட்டு வடக்கு முதல் கீழ்ப்பாக்கம் வரையிலான சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் தற்போது சீரான வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை மேற்கொள்ள ‘தாமிரபரணி’ மற்றும் ‘பவானி’ ஆகிய சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 674 மீட்டர் சுரங்கப்பாதை கட்டப்பட வேண்டும்.
இந்த இடத்தில் தாமிரபரணி சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் மேல் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை, 459 மீட்டர் வரையிலான சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த இடத்தில் மேல் பாதை பணிகள் அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கீழ் பாதை பணிகள் இந்த மாதம் தொடங்கியது. இதுவரை, 8.4 மீட்டர் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
சேத்துபட்டு வடக்கு முதல் கீழ்ப்பாக்கம் வரையிலான சுரங்கப்பாதை கட்டுமானம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. ரயில் பாதைகளைத் தவிர, சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் படகு குளம் மற்றும் சேத்துப்பட்டு சுற்றுச்சூழல் பூங்கா வழியாக செல்ல வேண்டும். இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சுரங்கப்பாதை பணியை 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.