கோவை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த கோல்ட்வின்ஸ் – உப்பிலிபாளையம் மேம்பாலத் திட்டம் 93 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. மாநகரில் தொடர்ந்து நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முக்கியமான போக்குவரத்து சாலைகளில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இதனால், உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்ட்வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவில் மேம்பாலம் கட்டப்படும் திட்டம் உருவாக்கப்பட்டது.

இப்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், அமைச்சர் எவ் வேலு நேரில் ஆய்வு செய்து, முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரின் பார்வையின் போது, கோவை காந்திபுரத்தில் உருவாகி வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தையும் பார்த்தார். இந்த நூலகம் ரூ.300 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதில், கட்டிட பணிக்கே 245 கோடி, புத்தகங்களுக்கு 50 கோடி, கணினி உபகரணங்களுக்கு 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் 305 இருக்கைகள் கொண்ட கலையரங்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பிரிவு, தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுக்கு தனித்தனி பிரிவுகள், டிஜிட்டல் நூலகம் மற்றும் அறிவியல் மையம் போன்ற பல அம்சங்கள் இடம்பெற உள்ளன. இதன் கட்டுமானம் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு புறவழிச்சாலை திட்டத்தின் முதல் கட்டம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது நில எடுப்பு மற்றும் டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன. கோல்ட்வின்ஸ்-உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் நடைபாதையும், 1.5 மீட்டர் டிரைனும் இணைக்கப்பட்டு வருகிறது.
இந்த மேம்பாலத் திட்டம் ஜூலை 30ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, கோவை மாநகரின் போக்குவரத்து சிக்கல் பெரிதளவில் குறையும் என நம்பப்படுகிறது. ஜனவரி மாதம் முதல்வர் இந்த புதிய நூலகத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சிங்காநல்லூர் மேம்பாலம் ஒன்றிய அரசின் கீழ் வருகிறது என்றும், கோவை – திருச்சி சாலை விரிவாக்க திட்டம் ரூ.3,800 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் எவ் வேலு கூறினார்.