தமிழகத்தில் 10,900 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில், 9,150 மெகாவாட் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,750 மெகாவாட் மின்சாரம் இந்தியாவின் மத்திய மின் உற்பத்தி ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்காக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5,000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான அறிவிப்பை 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் கூட அமைக்கப்படவில்லை. இதுகுறித்து, தொழில் துறை வல்லுனர்கள் கூறியதாவது:- தமிழகம் மற்றும் குஜராத்தில் காற்றாலை மின் நிலையம் அமைப்பதற்கு சாதகமான சூழல் உள்ளது.

ஒரு மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையம் அமைக்க 3 முதல் 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. குஜராத் அரசு காற்றாலை மின் நிலையம் அமைக்க நிலத்தை மேம்படுத்தி குறைந்த விலையில் குத்தகைக்கு வழங்குகிறது. தமிழகத்தில் நிலத்தின் விலை மிக அதிகம். தனியார் நிறுவனங்கள் காற்றாலை மின்சாரத்திற்கு சாதகமான இடங்களில் நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். மின்சார வாரியத்தின் காற்றாலை மின் நிலையங்கள் தூத்துக்குடி, மதுரை, கோவை, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ளன.
1986 முதல் 1993 வரை கட்டப்பட்ட இவற்றில் பல தற்போது பழுதடைந்துள்ளன. அந்த இடங்களில் நிலத்தை இலவசமாக வழங்கி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து காற்றாலை மின் நிலையம் அமைக்க அனுமதி அளித்தால், திட்டத்தை செயல்படுத்த பலரும் முன்வருவார்கள். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தனியாருடன் இணைந்து காற்றாலை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மின்வாரியம் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “”கடந்த ஆண்டு துவக்கப்பட்ட பசுமை எரிசக்தி கழகம் மூலம், நீர் மின் திட்டங்கள், சிறு நீர் மின் திட்டங்கள், பேட்டரி ஆற்றல் சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காற்றாலை மின் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்,” என்றார்.