சேலம்/தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.73 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், நீர்வரத்து வினாடிக்கு 3,548 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2,878 கன அடியாக இருந்த மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 3,548 கன அடியாக அதிகரித்துள்ளது.

குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் 111.60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 111.73 அடியாக உயர்ந்தது. அணையில் 80.89 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. தருமபுரி மாவட்டம், ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த 2 நாட்களாக மாறாமல் உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை நிலவரப்படி 4,000 கன அடியாக இருந்தது.