புதுடெல்லி: மத்திய அரசின் தேசிய பசு நல அமைப்பு 2022-ம் ஆண்டு முதல் தலைவர் இல்லாமல் செயல்படுகிறது. இத்தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் நேற்று மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். ராஷ்டிரிய காமதென்யு ஆயோக் (RKA-தேசிய பசு நல அமைப்பு) என்பது பசுக்கள் மற்றும் அவற்றின் சந்ததிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு ஆலோசனை அமைப்பாகும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு பிப்ரவரி 2019-ல் இது மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்த ஆர்.கே.ஏ அமைப்பின் தலைவர் பதவி 2022-ம் ஆண்டு முதல் காலியாக உள்ளது. இதுகுறித்த கேள்வியில், 2019-20-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டில் RKA-க்கு 500 கோடி ஒதுக்கப்பட்டதா?’ இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் மக்களவையில், ‘ஆர்கேஏவின் தலைவர் பதவி பிப்ரவரி 2022 முதல் காலியாக உள்ளது. அது பரிந்துரைத்த திட்டங்கள் எதுவும் 2019 முதல் செயல்படுத்தப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆர்கேஏவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது ராஷ்ட்ரிய கோகுல் மிஷனின் ஒரு பகுதியாகும், இது பால் உற்பத்தி மற்றும் கால்நடைகள் மற்றும் எருமைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.’ என்றார். ஆர்கேஏ முன்னாள் தலைவர் வல்லபாய் கத்ரியாவின் பதவிக்காலம் சர்ச்சையில் சிக்கியது. அக்டோபர் 2020-ல், கத்ரியா பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட “சிப்” ஒன்றை வெளியிட்டார், இது மொபைல் போன்களில் இருந்து கதிர்வீச்சைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார். இந்த கூற்றுக்கு அறிவியல் ஆதரவு இல்லை என்பது நினைவுகூரத்தக்கது.