நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டதாக கடந்த 4-ம் தேதி சட்டசபையில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழக மக்களின் எண்ணங்களையும், பேரவைத் தீர்மானங்களையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. எங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கலாம். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எங்களின் போராட்டம் ஓயாது. அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்துவோம். அந்தக் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க வேண்டும். அதன்படி, நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறியது. இதன் மூலம் இன்று வரை 3500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படித்து வருகின்றனர். அதிமுக அரசு செய்தது போல் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இரண்டு முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
திமுகவின் இரட்டை வேடத்தால் நீட் நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் மன வேதனையில் இதுவரை சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நீட் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. நீட் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார். இந்நிலையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி என்ன முடிவு எடுக்க முடியும்?
தமிழக சட்டப்பேரவைக்கு 2026-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாலும், மக்களைச் சந்திக்க வேண்டியதிருப்பதாலும், 4 ஆண்டுகளாகியும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முயற்சி எடுக்காததற்கு எதிராக மக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் தீர்க்க திமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்த சந்திப்பில் எந்த தீர்வும் ஏற்படாது. இது ஒரு நாடகம். எனவே, திமுக அரசு அழைப்பு விடுத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது. இவ்வாறு அவர் கூறினார்.