சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தின் மெய்யனூர் பணிமனை முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்கம் 6-வது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. போக்குவரத்து சங்க மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம்பன், பொருளாளர் சேகர், சிஐடியுவின் ஓய்வு பெற்ற போக்குவரத்து சங்க ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் மற்றும் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பங்கேற்று பேசியதாவது: போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைத்து நிதிச் சலுகைகளையும் பெறும் வரை போராட்டம் ஓயாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட தொழிலாளர்களைப் பற்றிப் பேசவில்லை. சென்னை துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டத்தில், அவர்களின் ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை.

குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படவில்லை. ஆனால் இப்போது நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சுழற்சி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகத்தில், சென்னையில் மட்டும் 5 பட்டறைகள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்பட்டால், அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் கைகோர்த்து போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.
மின்சார வாரியத்தில் ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை ஒன்றிணைத்து சிஐடியு தனது போராட்டத்தைத் தொடர்கிறது. சமூக நீதியின் பெயரால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். போக்குவரத்துத் துறையை உருவாக்கிய கருணாநிதி, அதை ஒருபோதும் தனியார்மயமாக்க விடமாட்டேன் என்று கூறினார்.
ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கி வருகின்றனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், வேலைநிறுத்தம் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.