சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகளை மே 2-வது வாரத்தில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளைப் படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4 வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன.

நாடு முழுவதும் சுமார் 42 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். மேற்கண்ட தேர்வுகளின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி டெல்லியில் நடந்து வருகிறது. இந்தப் பணி முடிந்ததும், தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் இரண்டு தேர்வுகளின் முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் cbse.gov.in, DigiLocker மற்றும் Umang செயலி போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் தங்கள் மதிப்பெண்களைச் சரிபார்க்கலாம்.