சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் முதன்முறையாக சரக்கு ரயிலில் புதிய மின்சார ஆட்டோக்களை அனுப்பி சாதனை படைத்துள்ளது. இந்த சரக்கு பயணத்தின் மூலம் ரயில்வே ரூ.18.75 லட்சம் வருவாய் ஈட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ரயில்வே, சென்னை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த 2020 முதல் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நவீன வசதிகளுடன் கூடிய சரக்கு ரயில்களை அறிமுகப்படுத்துதல், பொருட்களை கையாள ஏற்ற ரயில் நிலையம் அமைத்தல், வணிக மேம்பாட்டுக் குழுவை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சரக்கு ரயில் போக்குவரத்து வேகமாக வளரத் தொடங்கியது. தற்போது, சென்னையில் இருந்து நாட்டின் பல நகரங்களுக்கு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சூழலில், சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக, சரக்கு ரயிலில் புதிய மின்சார ஆட்டோக்களை அனுப்பி சாதனை படைத்துள்ளது. மந்த்ரா எலக்ட்ரிக் (முருகப்பா குழுமம்) தயாரித்த மின்சார ஆட்டோரிக்ஷாக்கள் நேற்று ஒரு சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு ஆந்திராவின் தடா ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்காளத்தின் ரங்பூருக்கு அனுப்பப்பட்டன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
இதன் மூலம், சென்னை ரயில்வே கோட்டம் சரக்கு வர்த்தகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ரயில் மூலம் மின்சார வாகனங்களை பெரிய அளவில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளையும் இது உருவாக்குகிறது. ஒவ்வொரு சரக்கு ரயிலுக்கும் ரூ.18.75 லட்சம் வருமானம் கிடைக்கும். நடப்பு நிதியாண்டில் 8 சரக்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.1.50 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலைப் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது, மின்சார வாகனங்களை ரயில் மூலம் கொண்டு செல்வது கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. இந்த வகையில், நாட்டின் பசுமையான போக்குவரத்து சேவையாக ரயில்வே தனது பங்கை ஆற்றி வருகிறது என்றனர்.