மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் திருக்கடல்மல்லை எனப்படும் தலசயனப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மாசிமக திருவிழாவாக இன்று கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காலை 8 மணிக்கு உற்சவ தலசயனப் பெருமாள், ஆதிவராகப் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவர்களும் நான்கு ராஜவீதிகளில் வந்து கடற்கரையில் ஏறினார்கள்.

பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சக்கரத்தாழ்வார் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களுடன் கடலில் இறங்கினார். அப்போது, சுவாமிக்கு திரளான பக்தர்கள், பெண்கள் மஞ்சள் பூசி, கடலில் இறங்கி புனித நீராடினர். தீர்த்தவாரி விழா முடிந்ததும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர், தலசயனப் பெருமாள், ஆதிவராகப் பெருமாள் ஆகிய சுவாமிகள் ஊர்வலமாக கோயில்களுக்கு புறப்பட்டனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில் காலை மற்றும் மதியம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் மேலாளர் சந்தானம் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.