சென்னை மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இ-பெர்மிட் உரிமம் பெற ஏப்ரல் 28-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் அடிக்கல் நாட்டும் பணியின் போது பெறப்படும் சாதாரண மண் மற்றும் நொறுக்கப்பட்ட கல்லை அகற்ற உரிமம் வழங்கப்படுகிறது.
அனுமதி பெற்ற கட்டுமான நிறுவனங்களின் இடங்களில் உள்ள கனிமங்களை அகற்ற, உரிய கட்டணத்தை அரசுக்கு செலுத்தி, சென்னை புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அச்சிடப்பட்ட ரூட் பாஸ் பெற வேண்டும். இதற்காக, ‘mimas.tn.gov.in’ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பாஸ்களை பெற்று, கனிமங்கள் கொண்டு செல்லும் நடைமுறை, ஏப்., 28 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அனுமதியின்றி கனிமங்கள் கடத்துவதை தடுக்கவும், கண்காணிக்கவும், அரசுக்கு வருவாய் இழப்பை தடுக்கவும், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், 2025-26-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பில், மாநிலம் முழுவதும் குவாரி குத்தகை உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டு பரிசீலனை செய்து, படிப்படியாக குத்தகை உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனிம வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதையடுத்து, ஏப்ரல் 28-ம் தேதி முதல் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் தனியார் பட்டா நிலங்களில் உள்ள பல்வேறு வகையான கனிமங்களுக்கு குத்தகை உரிமம் அல்லது அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.
எனவே, வரும் 28-ம் தேதி முதல், மெட்ரோ ரயில் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் குத்தகைக்கு விண்ணப்பங்கள் மற்றும் சுரங்க நிலுவை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை mimas.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கனிம விதிகளை மீறி அரசு அனுமதியின்றி கனிமங்கள் கடத்தப்படுவதும், விதிகளை மீறி அரசு வழங்கிய வழித்தடச் சான்றிதழ்கள் மாற்றியமைக்கப்பட்டு, அனுமதியில்லாத இடங்களில் இருந்து கனிமங்களை கடத்துவதும் கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன உரிமையாளர், வாகன ஓட்டுநர், நிறுவன உரிமையாளர்கள் மீது குற்றவியல் மற்றும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.