சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படாதது இறைவனின் அருள் என மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அவ்வழியாக சென்ற பயணிகள் விரைவு ரயில் சரக்கு ரயில் மீது மோதியது. இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் சேதமடைந்து திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் விபத்து குறித்து மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறியதாவது: சென்னை அருகே விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாரும் இறக்கவில்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மற்ற பயணிகள் மெமு ரயில்கள் மூலம் வேறு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கடவுள் அருளால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றார்.