மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மாம்பாக்கம், பாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் மதுராந்தகம் அருகே 30 கி.மீ., வேகம் குறைக்கப்படுவதால், சென்னைக்கு ஒரு மணி நேரம் தாமதமாக ரயில்கள் வந்து செல்கின்றன.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதில் மதுராந்தகம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 123 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் மாம்பாக்கம், பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் மதுராந்தகத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை சுற்றி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் தாமதமாகி வருகின்றன. இதில் நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வந்து செல்கின்றன.
மேற்குறிப்பிட்ட பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் ரயில்வே பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர், போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.