சென்னை: தமிழ்நாடு கடந்த 2024-25 நிதியாண்டில் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில், தமிழகத்தின் மின்னணு ஏற்றுமதி ஒப்பந்த மதிப்பு 9.56 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. இது கர்நாடகா (4.60 பில்லியன் டாலர்), உத்தரப்பிரதேசம் (4.46 பில்லியன் டாலர்) ஆகிய மாநிலங்களை விட 2 மடங்கு அதிகம்.
இந்நிலையில் இந்த ஆண்டு புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதாவது எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 14.65 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற புதிய வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் 41.23 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மின்னணு உற்பத்தியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். முந்தைய ஆண்டு 9.56 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 53 சதவீத வளர்ச்சி என்பது பெருமைக்குரிய தருணம்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இது சாத்தியமானது. இது ஆரம்பம்தான். விரைவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 100 பில்லியன் டாலர்களை எட்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகா (7.85 பில்லியன்), உத்தரப்பிரதேசம் (5.26 பில்லியன்), மகாராஷ்டிரா (3.51 பில்லியன்), குஜராத் (1.85 பில்லியன்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.