சென்னை செனாய் நகர் விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், “திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால், நாம் இன்னும் முகவரி இல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பற்ற மனிதர்களாக இருந்திருப்போம். திராவிட இயக்கம் தான் நம்மை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தன்னிறைவு அடைய செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்குவதற்காக முதல்வர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டதாகவும், அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 89,400 பட்டாக்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், மாநிலம் முழுவதும் 86,000 பட்டாக்கள் வழங்க 6 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை வெற்றிகரமாக நிறைவேற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் 29,187 பேருக்கு, மதுரை, நெல்லை போன்ற நகரங்களில் 57,084 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படும் எனவும், இது தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் கூறினார்.
“உங்கள் பிள்ளைகளை பட்டதாரிகளாக ஆக்கிய திராவிட மாடல் அரசு, இப்போது உங்கள் அனைவரையும் ‘பட்டாதாரர்களாக’ ஆக்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 12.29 லட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கி சாதனை படைத்திருக்கிறோம்” என உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.