கோவை: “இன்று விநாயகர் சதுர்த்தி. விநாயகப் பெருமானின் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தங்கள் வாழ்க்கையின் எந்தவொரு செயலையும் விநாயகப் பெருமானை வணங்குவதன் மூலம் தொடங்குகிறார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய விநாயகர் ஊர்வலத்தை பாலகங்காதர திலகர் தொடங்கி வைத்தார். அன்று தொடங்கிய விநாயகர் ஊர்வலம் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் இந்த எழுச்சியை தடுக்க இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் திமுக அரசு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.
வழிபாட்டு உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை. அரசியல் சட்டத்தை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு, அரசியல் சாசனத்திற்கு எதிராக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறிக்கிறது.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக இந்து மதத்தையும் இந்துக் கடவுள்களையும் வெறுக்கலாம். ஆனால் அரசாங்கம் எல்லோருக்குமானது. திமுக தலைவர் என்ற முறையில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கலாம். அது அவருடைய உரிமை.
ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் பொதுவான முதல்வர் பதவியை வகித்து, இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்க மறுப்பது, இந்துக்களை அவமதிக்கும் செயலாகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தியில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், முதல்வர் என்ற முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்களை மதிக்க வேண்டும்.
முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்திய முதல்வர் ஸ்டாலின் இந்த முறையாவது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.