சென்னை பெரம்பூரில் உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. தற்போது, வந்தே பாரத் ரயில் மற்றும் அம்ரித் பாரத் ரயில் உள்ளிட்ட வந்தே பாரத் ரயில் வகைகளை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாட்டின் முதல் அதிவேக வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணிகள் ஐசிஎஃப் ஆலையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
16 பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் பார்சல் ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. உணவுப் பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வசதி இதில் இருக்கும். குறிப்பாக, குளிர்சாதன பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலின் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, சென்னை ஐசிஎப் அதிகாரிகள் கூறியதாவது:-

பெரு நகரங்களுக்கு இடையே சரக்கு ரயில் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது. முதன்முறையாக முழுமையான பார்சல் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல் பார்சல் ரயில் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஒரே நேரத்தில் 264 டன் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். தனியார் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல முடியும். இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட வசதிகளும் இருக்கும் என்றனர்.