சென்னை: தமிழகத்தில் நாகர்கோவில் – சென்னை இடையேயான ரூட்டிலும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது. நாகர்கோவிலில் இருந்து அதிகாலை புறப்பட்ட இந்த ரயில் பிற்பகலுக்குள் சென்னையை வந்தடைந்தது. இந்த ரயில் விரைவாக சென்னை வந்தடைந்தது பயணிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்காக ரயில்வே பல்வேறு புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தான் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை பயணிகளுக்கு சொகுசு, விரைவான பயணம் என்பதை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதிநவீன சொகுசு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பயணிகளின் வரவேற்பை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முழுவதும் ஏசி, சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவுகள், பயோ கழிப்பறைகள் என விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகள் இருப்பதனால் பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் மட்டுமே சென்னை – கோவை, சென்னை – நெல்லை, சென்னை – மைசூர், கோவை – பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் கோரிக்கையை அடுத்து நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் இதேபோல் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கும் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தொடக்கத்தில் இந்த ரயில் சேவை நெல்லை – சென்னை இடையேதான் இருந்தது. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையைடுத்து இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. அதன்படி வாரத்தின் 4 நாட்கள் அதிகாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னையை சென்றடையும்.
8 பெட்டிகளுடன் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால், இந்த ரயில் சேவையை அனைத்து நாட்களிலும் இயங்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை தினந்தோறும் இயக்க ரயில்வே முடிவு செய்தது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி சென்னைக்கு வரும் போது திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சேவையை தொடங்கி வைக்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் தினசரி ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் நடந்தது. அதன்படி 8 பெட்டிகளுடன் சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவிலை வந்தடைந்தது. அதாவது 8 மணி நேரம் 50 நிமிடத்தில் இந்த ரயில் சென்றடைந்தது. சோதனை ஓட்டமாக வந்த ரயிலில் பயணிகள் யாரும் ஏற்றப்படவில்லை. எத்தனை மணி நேரத்தில் வந்து சேருகிறது என்பதை கணக்கீடு செய்வதற்காக இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் வெள்ளை மற்றும் நீல நிறம் சேர்ந்ததாக இருந்தது. ஆனால் சோதனை முயற்சிக்காக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் காவி நிறத்தில் இருந்தது. இந்த ரயில்தான் தினசரி ரெயிலாக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.