
தேனி: கிருத்துமால் உட்கோட்டத்திற்கு சிறப்பு நிகழ்வாக குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வைகை அணையில் கூடுதலாக 1.68 டிஎம்சி தண்ணீர் இன்று முதல் வினாடிக்கு 650 கனஅடி வீதம் 0.45 டிஎம்சிக்கு மிகாமல், நீர் வரத்து மற்றும் வரத்துக்கேற்ப 8 நாட்களுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை அணையில் இருந்து கூடுதல் பாசனம் மற்றும் குடிநீருக்காக 2219 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையின் மதகுகளை மூழ்கடிக்கும் வகையில் தண்ணீர் பாய்ந்து வருவதால், சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர். அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.