மேட்டூர்: ஒகேனக்கல் அருவியில் குளித்தல் மற்றும் பரிசல் சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் 2வது நாளாக தடை விதித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவின் வயநாட்டிலும் பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கபினி அணை நிரம்பியதால், பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த 18-ம் தேதி முதல் காவிரியில் 25,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோல், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 1201 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கிடையில், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரியை வந்தடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இதனால், மெயினருவி மற்றும் சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் நிரம்பி வழிகின்றன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் காவிரியில் குளிப்பதற்கும், நீர் விளையாட்டுகளை இயக்குவதற்கும் விதிக்கப்பட்ட தடை நேற்று 2வது நாளாக நீட்டிக்கப்பட்டது. கபினியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணையை வந்தடைந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 8,218 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 22,469 கன அடியாக உயர்ந்தது.
டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு நீர் திறப்பை விட அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து உயரத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் காலை 113.57 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 113.81 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 83.94 டி.எம்.சி.,யாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளதால், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.