திருவள்ளூர்: தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 4 செ.மீ. மழைப்பொழிவு. செங்குன்றம், தாமரைபாகம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பூண்டி, ஜமீன் கொரட்டூர் ஆகிய இடங்களில் லேசான மழையும் பெய்தது.
இந்த மழையால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு வினாடிக்கு 595 கன அடி, பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 360 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 225 கன அடி, சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 30 கன அடி என மழைநீர் வரத்து இருந்தது.

அதுமட்டுமின்றி, பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 135 கன அடி வீதமும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதமும், ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 420 கன அடி வீதமும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
எனவே, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 3,058 மில்லியன் கன அடியாகவும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,455 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அதேபோல், 3,645 மில்லியன் கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,075 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 172 மில்லியன் கன அடியாகவும் உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.