திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் பூண்டி ஏரியும் ஒன்று. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழைக்காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஏரியில் சேமிக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப இணைப்பு கால்வாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கடந்த வடகிழக்கு பருவமழையால் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் நிரம்பின. எனவே, இந்த ஏரிகளில் இருந்து அப்போது உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் கடந்த 5ம் தேதி முதல் திறந்து விடப்பட்டு வந்தது. எனவே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.
இதனால் நேற்று முன்தினம் மதியம் தண்ணீர் திறப்பதை நீர்வளத்துறையினர் நிறுத்தினர். இதனால் நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,443 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 23.25 அடியாகவும் உள்ளது. இதில் சென்னையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 133 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், நேற்று காலை நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,861 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 34.12 அடியாகவும் உள்ளது.