சென்னை: மேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், 15 மற்றும் 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கலாம்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 3 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 2 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் உபாசியில் 1 செ.மீ., பதிவாகியுள்ளது. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.