சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக புதிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுதாரர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையம் மற்றும் சிடிசன் போர்டல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு நம்பிக்கையை தருகிறது.

கலெக்டர் இளம்பகவத் தெரிவித்ததாவது, தமிழகத்தின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற நில ஆவணங்கள் கணினி மூலம் கணினிமயமாக்கப்பட்டு, https://eservices.tn.gov.in/ இணையதளத்தில் பொதுமக்கள் எளிதில் பார்வையிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல சிட்டா பட்டா உரிமையாளர்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல், அவர்களின் வாரிசுதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், பட்டாவில் இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களின் வாரிசுதாரர்கள் அல்லது உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் சில தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவை இறப்புச் சான்று, வாரிசு சான்று, இறந்தவர்களின் வாரிசுகளின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல் கோரிய புலம் தொடர்பான வில்லங்கச் சான்று, பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவு மற்றும் நீதிமன்ற தீர்ப்பு போன்ற ஆவணங்கள் அடங்கும்.
இந்த விண்ணப்பங்கள் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ, Citizen Portal வழியாகவோ சமர்ப்பிக்க முடியும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு, பட்டா பெயர்கள் சரியாக புதுப்பிக்கப்படும் என்று கலெக்டர் கூறியுள்ளார்.
இதேபோல், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜிதும் இதே மாதிரியான அறிவிப்பை 4 நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அவர் தெரிவித்ததாவது, இறந்த நில உடமைதாரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, உரிய வாரிசுதாரர்களின் பெயர்கள் சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கூறினார். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு நில ஆவணங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் பட்டா ஆவணங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து, உரிய உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பொதுமக்கள் இந்த சேவைகளை பயன்படுத்தி, பட்டா பெயர் மாற்ற விவகாரங்களில் நேர்த்தியான முறையில் முன்னேற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.