தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் விஜய், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்த கூற்று தமிழக அரசியலில் புதிய அலையை எழுப்பியது. அவருடைய அந்த மின்னல் பேச்சு, மாநில அரசியலில் கூட்டணிகளின் பங்கு குறித்து கேள்விகள் எழுப்பச் செய்தது. இதனைத் தொடர்ந்து பல கட்சிகள், குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தரப்பினர், ஆட்சியில் அதிகார பங்கீடு வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினர்.

ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டதுபோல், தமிழ்நாட்டிலும் கூட்டணி கட்சிகளுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் தமிழகத்தில் திமுகவோ அல்லது அதிமுகவோ ஆட்சி அமைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு நிச்சயமாக அதிகார பங்கீடு செய்யப்படும் என்பதில் உறுதி இல்லை என்ற சந்தேகமும் நிலவியது. பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு இல்லாதபட்சத்தில் மட்டுமே, மற்ற கட்சிகளுக்கு அதிகார பங்கீடு வழங்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்நிலையில், திருப்பத்தூரில் விசிக சார்பில் நடத்தப்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசும் வாய்ப்பைப் பெற்ற விசிக அமைப்புச் செயலாளர் கோவேந்தன், 2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த ஆறு மாதங்களில் இந்த வாய்ப்பு பற்றி தெளிவாகும் என்றும் அவர் கூறினார். மேலும், யாரும் யாருக்கோ அடிமை அல்ல என்றும், தேர்தல் கூட்டணிகள் என்பது ஓர் ஒப்பந்தம் மட்டும்தான் என்றும் அவர் வலியுறுத்தினார். கட்சியை ஒரு குடும்பத்தை போல் திருமாவளவன் வழிநடத்தி வருகிறார் என்றும், எப்போதும் மக்கள் மத்தியில் இருப்பதே விசிகவின் போக்கு எனவும் கோவேந்தன் கூறினார்.
இவ்வாறான கருத்துகள், தமிழக அரசியலில் வரவிருக்கும் மாற்றங்களை முன்னறிவிக்கும் வகையில் கணிக்கப்படுகின்றன. விஜய்யின் நேரடி அரசியல் அறிவிப்பு மற்றும் கூட்டணி அமைப்பு தொடர்பான அரசியல் பேசுக்கள், எதிர்கால தேர்தல்களில் பல முன்னணி கட்சிகளை கடும் யோசனைக்குள்ளாக்கும் வாய்ப்பு உள்ளது.