சென்னை: பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழுமையாக கவனம் செலுத்தி வருவதால், அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 8-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவிருந்ததாகவும், அப்போது கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷாவின் சென்னை வருகையின் போது, அதிமுக-பாஜக கூட்டணியை வலுப்படுத்த பாமகவை கூட்டணியில் சேர்க்க அவர் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் முடிவடையாததால், அமித் ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணிகளில் அமித் ஷா முழுமையாக கவனம் செலுத்தி வருவதால், கட்சியின் தேசிய தலைமை நியமிக்கப்பட்ட பிறகு அவர் தமிழகம் வருவார் என்று பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.