புதுடெல்லி: கடந்த நிதியாண்டில் சர்வதேச அளவில் ஐபோன்களுக்கான தேவை அதிகமாக இருந்ததை தொடர்ந்து, இந்தியாவில் அதன் உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2024-25-ம் நிதியாண்டில் ஐபோன் விற்றுமுதல் ரூ.1.89 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.
மொத்த உற்பத்தியில் ஐபோன் ஏற்றுமதியின் மதிப்பு மட்டும் ரூ.1.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னா தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரால் சீனாவில் இருந்து ஐபோன் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரி மிகவும் குறைவு. இதுவும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக மாறியுள்ளது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ஏப்ரல்-பிப்ரவரி 2024-25 வரை முடிவடைந்த 11 மாத காலப்பகுதியில் ரூ.1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
இது முந்தைய 2023-24 நிதியாண்டின் இதே காலத்தை விட 54 சதவீதம் அதிகமாகும் என்று இந்திய செல்லுலார் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. ஆப்பிளின் ஐபோன் மொத்த ஏற்றுமதியில் 70 சதவீதம் ஆகும். ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் முன்னணியில் உள்ளது.