ஜெர்மனியில் வேலை செய்யும் இந்தியர்கள், அந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், நிதி, ஆராய்ச்சி போன்ற துறைகளில் அவர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்மேன் சமீபத்தில் கூறியதாவது, ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர்கள், ஜெர்மனியர்களை விட சராசரியாக 40 சதவீதம் அதிக ஊதியம் பெறுகிறார்கள். இது இந்தியர்களின் திறமை, கல்வி தரம் மற்றும் தொழில்நுட்ப நுணுக்கத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த அறிவிப்பு இந்திய இளைஞர்களுக்குள் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் ஜெர்மனியின் பல முக்கிய நிறுவனங்களில், குறிப்பாக ஐ.டி., ஆட்டோமொபைல் துறை, ஆராய்ச்சி மையங்கள் போன்ற இடங்களில் உயர்ந்த பதவிகளில் பணிபுரிகின்றனர். அதனால் அவர்களின் சம்பளம் ஜெர்மனியர்களைவிட அதிகமாக இருப்பது இயல்பானது என தூதர் தெரிவித்தார். ஜெர்மனியில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் கல்வியாண்டில் ஜெர்மனியில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனி, இந்திய மாணவர்களுக்கு மிகவும் விருப்பமான கல்வி தலமாக மாறியுள்ளது. ஜெர்மனி அரசு, வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பட்டப்படிப்பை முடித்த பிறகு 18 மாதங்கள் வரை ஜெர்மனியில் தங்கி வேலை தேட அனுமதி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பல இந்திய மாணவர்கள் அங்கே தங்கி தங்கள் தொழில் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். ஜெர்மனி தற்போது திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. அதனால் இந்தியர்கள் போன்ற திறமையான இளைஞர்கள் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உறவுகள் மேலும் வலுப்பெறுகின்றன.