சென்னை: ஏப்ரல் 1ல் தொடங்கிய புதிய நிதியாண்டுக்கான முக்கிய மாற்றங்கள் மே 1 முதல் அமலுக்கு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, EPFO அமைப்பில் 20 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களுக்கு ரூ.50,000 வரை சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, நாட்டு மக்களின் நிதி பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், ஒரே PF கணக்கில் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்த சந்தாதாரர்களுக்கு லாயல்டி-கம்-லைஃப் திட்டத்தின் கீழ் இச்சிறப்பு தொகை வழங்கப்படும்.

அதாவது, பணியாளர்கள் வேலை மாறினாலும், ஒரே UAN எண்ணின் கீழ் PF கணக்கைத் தொடர்ந்தால் மட்டுமே இந்த நன்மையை பெற முடியும். குறைந்தபட்ச சம்பளம் ரூ.5,000 வரை உள்ளவர்கள் ரூ.30,000 பெறுவார்கள். ரூ.5,001 முதல் ரூ.10,000 வரையிலான சம்பளத்துக்கு ரூ.40,000 பலன் கிடைக்கும். மேலும், ரூ.10,000க்கும் அதிகமான அடிப்படைச் சம்பளத்தைப் பெறுபவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், மே மாதம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
மேலும், EPFO 3.0 என்ற புதிய மாற்றம் ஜூன் மாதத்துக்குள் அறிமுகமாகும் எனவும், அதன்பின் ATM வழியாக பிஎஃப் தொகையை எளிதாக பெறும் வசதியும் ஏற்படுத்தப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக EPFO சிறப்பு கார்டுகள் வழங்கும் திட்டத்திலும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கார்டுகள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
தற்போது பிஎஃப் தொகை பெறுவதற்கான நடைமுறை சிக்கலாக இருப்பதால், அதை எளிமைப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த புதிய மாற்றங்கள் ஊழியர்களுக்குப் பெரும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், PF பங்களிப்பு விகிதத்தில் 12% கட்டுப்பாடு நீக்கப்பட்டு, ஊழியர்களின் விருப்பப்படி அதிக அளவில் பங்களிக்க அனுமதிக்கும் வாய்ப்பு பற்றிய திட்டங்களும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இந்த முயற்சிகள் ஊழியர்களின் சேமிப்பு பழக்கத்தையும், நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும் வகையில் அமையும். EPFO பயனாளர்களுக்கு மே மாதம் தொடங்கி புதிய நன்மைகள் காத்திருக்கின்றன.