யூபிஐ மூலம் பணம் செலுத்தும் பயனாளர்களுக்கு புதிய சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்கள் அதிக அளவில் யூபிஐ வசதியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இப்போது, அதன் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்க தள்ளுபடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு கட்டணத்துடன் ஒப்பிடும்போது, யூபிஐ பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்கள் சற்று குறைவாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, ரூ.100 பெறுமான பொருளுக்கு யூபிஐ மூலம் ரூ.98 மட்டும் செலுத்தினால் போதும். இது வாடிக்கையாளர்களை யூபிஐ நோக்கி இட்டுச் செல்லும் என்று நம்பப்படுகிறது.

கிரெடிட் கார்டுகளின் மூலம் பணம் செலுத்தும் போது 2 முதல் 3 விழுக்காடு வரை எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கடைக்காரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் செலவாகிறது. சில வணிகர்கள் இந்தச் செலவை நேரடியாக வாடிக்கையாளர்களிடமே வசூலிக்கின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையில், யூபிஐ பரிவர்த்தனையை ஆதரிக்கும் புதிய அமைப்பை உருவாக்க நுகர்வோர் விவகாரத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
இத்திட்டம் குறித்து ஜூன் மாதத்தில் முக்கிய நிறுவனங்களுடன் விவாதிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதில், இ-காமர்ஸ் தளங்கள், NPCI மற்றும் கட்டண சேவை நிறுவனங்களும் பங்கேற்கவுள்ளனர். அதே நேரத்தில், யூபிஐ பரிவர்த்தனையின் செயலாக்க நேரமும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 30 விநாடிகள் ஆகும் பரிவர்த்தனை நேரம், ஜூன் 16 முதல் 15 விநாடிகளாக குறைக்கப்படும். இந்த அறிவிப்பு, யூபிஐ பரிவர்த்தனையை மேலும் வேகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புதிய முயற்சி, நாடு முழுவதும் யூபிஐ பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், கிரெடிட் கார்டு சார்ந்த செலவுகளை குறைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.