மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான எதிர்பார்ப்பு தீபாவளி காலத்திலேயே நனவாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 ஜனவரி முதல் 8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். தற்போது 2.57 என உள்ள ஃபிட்மெண்ட் காரணி 2.86 ஆக உயர்த்தப்படலாம். அதன்படி, குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 இல் இருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும். ஓய்வூதியமும் ரூ.9,000 இல் இருந்து ரூ.25,740 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

7ஆவது ஊதியக் குழுவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் 2016-ல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000 இல் இருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. அதேபோல் ஓய்வூதியம் ரூ.3,500 இல் இருந்து ரூ.9,000 ஆக அதிகரித்தது. இப்போது 8ஆவது ஊதியக் குழுவில் ஏற்படும் உயர்வு, ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கூடுதல் நிவாரணமாக இருக்கும். குறிப்பாக, சம்பள நிலைகளில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப் படி (HRA), பயணப் படி (TA) போன்ற பல்வேறு சலுகைகளும் இந்தக் குழுவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஊழியர் சங்கங்கள் மத்திய அரசை விரைவில் குழுவை அமைக்க வலியுறுத்தியுள்ளன. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மாநிலங்களுடன் ஆலோசனை நடைபெறுவதாகவும், விரைவில் குழு அமைப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தீபாவளிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். சம்பள உயர்வு மட்டுமின்றி, எதிர்கால ஓய்வூதிய கணக்கீட்டிலும் இதன் தாக்கம் பெரிதாக இருக்கும். எனவே, வரும் மாதங்களில் இந்த அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக அமையும்.