கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு துறையை சார்ந்த பங்குகள் அதிரடி வளர்ச்சி பெற்று, முதலீட்டாளர்களுக்கு பெரும் இலாபத்தை வழங்கி ஆச்சரியம் அளித்துள்ளன. குறிப்பாக 2020-க்குப் பிறகு ஆரம்பமான பங்குச் சந்தையின் புளீஷ் ரன், 2023 ஆம் ஆண்டில் அதிக வேகத்தில் வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பாதுகாப்பு பட்ஜெட்டின் அதிகரிப்பு, ‘மேக் இன் இந்தியா’ திட்டம், மற்றும் ஏற்றுமதி சந்தையின் விரிவாக்கம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
2020 ஆம் ஆண்டில் டிஃபென்ஸ் பங்குகளில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது இன்று சுமார் ₹18 லட்சமாக மாறியிருக்கும். இது சுமார் 14 மடங்கு அதிகரிப்பு. இருந்தாலும் சமீபத்தில் ஏற்பட்ட சரிவுகளால், தற்போது முதலீடு செய்வது சரியான நேரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போர் பதற்றங்கள் இந்த பங்குகளை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், ஆகாஷ் ஏவுகணை அமைப்பை உருவாக்கியது. சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலில் இந்த ஏவுகணை சிஸ்டம் இந்தியாவுக்கு வெற்றியைக் கொணர்ந்தது. இதனால் அந்த நிறுவன பங்குகள் கடந்த 3 மாதங்களில் 90% உயர்ந்துள்ளன. கடந்த 6 மாதங்களில் முதலீட்டாளர்களின் முதலீடு இரட்டிப்பாகியுள்ளது. ஒருவரால் 2020-ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், அதன் மதிப்பு தற்போது ₹17.06 லட்சம் இருக்கும். கடந்த 3 ஆண்டுகளில் இந்த பங்குகள் 400% வரை வளர்ந்துள்ளன.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு பிஎஸ்யூ நிறுவனமாக இருக்கிறது. இது மஹாரத்னா அந்தஸ்துடன், ஏராளமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் வருவாய் வருடாந்திர 9% வளர்ச்சி பெற்றது. நிகர லாபம் அதைவிட வேகமாக 26% வளர்ந்து ₹7,600 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வருவாய் ₹17,300 கோடியாகவும், நிகர லாபம் ₹4,360 கோடியாகவும் இருந்தது.
HAL தற்போது ₹1.3 லட்சம் கோடி மதிப்பிலான ஆர்டர் புக் வைத்திருப்பதாகவும், அது அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிகிறது. மேலும், ₹1.33 லட்சம் கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்கள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) இந்திய அரசின் 51.14% பங்குடன் செயல்படுகிறது. ரேடார், கம்யூனிகேஷன் மற்றும் மின்னணு போர் உபகரணங்களை இந்திய ராணுவத்துக்கு வழங்கும் BEL, கடந்த ஆண்டில் 15% வருவாய் வளர்ச்சி பெற்று ₹20,270 கோடியையும், 30% லாப வளர்ச்சி பெற்று ₹3,990 கோடியையும் பதிவு செய்தது. ஏற்றுமதியில் 11%-இல் இருந்து 17%-க்கு வளர்ச்சி கண்டுள்ளது.
BEL தனது வருவாயில் 6-7% அளவைக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்குகிறது. இது எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்கும் வலிமையை வழங்குகிறது.
HAL மற்றும் BEL ஆகிய இரண்டும் வலுவான ஆர்டர் புக், அரசின் உள்நாட்டு உற்பத்தி ஊக்கமளிப்பு மற்றும் நிலையான வருவாய் வளர்ச்சியால் எதிர்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நம்பகமான வாய்ப்புகளை வழங்குகின்றன. இருப்பினும் தற்போதைய உயர் மதிப்பீட்டு நிலைமையில், முதலீட்டாளர்கள் நீண்டகால நோக்குடன் கவனமாக ஆய்வு செய்து முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
இந்த வளர்ச்சியின் தொடர்ச்சி, இந்திய பாதுகாப்பு துறையின் பங்கு சந்தையில் எதிர்காலம் மிக பிரகாசமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.