2025ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது சாமானிய மக்களுக்கு நகை வாங்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. தங்கத்தின் இந்த உயர்வுக்கு புவிசார் அரசியல் காரணங்களும், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ரஷ்யா–உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்–பாலஸ்தீனக் குழப்பம் போன்ற நிகழ்வுகள் உலக நாடுகளின் நிதிநிலை மீது தாக்கத்தை ஏற்படுத்தியதால், பல நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கின. இதனால் கடந்த ஆண்டு தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
அதனுடன், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் பங்குசந்தையில் கடும் சரிவுகள் ஏற்பட்டன. இந்த திடீர் வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை நோக்கி மாறினர். இதனாலும் தங்கத்தின் விலை வரலாற்றில் காணாத உயரத்தை எட்டியது.
சமீபத்தில், தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.70,000-ஐ தாண்டியது. அதன் பின் தொடர்ந்து அதையும் விட அதிகமாக விலை உயர்ந்து தற்போது ரூ.72,000 வரை சென்றுள்ளதால் நகை விரும்பிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிராம் தங்கம் ரூ.9,000-ஐ நெருங்கியிருக்கிறது.
17 ஏப்ரல் 2025 அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனுடன் 18 ஏப்ரல் அன்று, விலை மேலும் உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.8,945, ஒரு சவரனுக்கு ரூ.71,560 ஆகியுள்ளது.
18 காரட் தங்கம் ரூ.7,405 (ஒரு கிராம்), மற்றும் ரூ.59,240 (ஒரு சவரன்) என விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையோ கடந்த மூன்று நாட்களாக மாற்றமின்றி நிலைத்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறி வருவதால், எதிர்காலத்தில் இது இன்னும் மேலே செல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.