இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது ஒரு எளிய நிகழ்வாக இல்லாமல், பெரிய விழாவாக மாறிவிட்டது. பந்தலோ, கேட்டரிங்களோ, நகைகளோ, அழகுப் புடவை யோடு சேர்ந்து ஒரே நிகழ்வில் அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இந்த செலவுகளைத் தாங்கிக்கொள்வது சிலருக்கு சிரமமாகவே இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு பல வங்கிகள் திருமணச் செலவுகளுக்கென தனித்தனி கடன்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் ICICI வங்கியுடன் தொடங்கி இந்தியாவின் பல முக்கிய வங்கிகள் திருமணக் கடன்களை வழங்கும் சேவையை கொண்டுள்ளன. இது ஒரு தனிநபர் கடன் வகையாகும். இதில் பிணையம் வைக்க தேவையில்லை என்பதுதான் முக்கிய அம்சம். அலங்கார செலவுகள், மண்டப முன்பதிவு, மணப்பெண் மாப்பிள்ளை உடைகள், நகைகள், அழகு சிகிச்சை மற்றும் வீடியோ/புகைப்பட சேவைகள் போன்ற அனைத்துக்கும் இந்தக் கடன் பயன்படக்கூடியது.

தகுதியுடையவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் கிடைக்கக்கூடும். வட்டியளவு வருடத்திற்கு 10.85% முதல் தொடங்குகிறது. இந்தக் கடனுக்கான தவணைக் காலம் 12 மாதங்கள் முதல் 72 மாதங்கள் வரை இருக்கும். உங்கள் சி.பி.இல் ஸ்கோர் (CIBIL Score) நல்ல நிலையில் இருந்தால், குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம்.
திருமணக் கடனைப் பெறுவதற்கான வயது வரம்பு 21 முதல் 58 ஆகும். ஊதியம் பெறும் பணியாளர்களோ, சுயதொழில் புரிபவர்களோ தகுதி உள்ளவர்கள். உங்கள் மாத வருமானம், முன் உள்ள கடன் வரலாறு, கடன் திருப்பிச் செலுத்தும் திறன் போன்றவை இந்தக் கடனுக்கான தகுதியை நிர்ணயிக்கும்.
வங்கி கடன் அங்கீகாரம் அளிக்கும்போது, உங்கள் அடையாளம், முகவரி மற்றும் வருமான சான்றுகள் வேண்டும். உதாரணமாக ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மின்சார பில், மூன்று மாதங்களுக்கான சம்பளச்சீட்டு அல்லது வங்கி விவரம் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். சில சந்தர்ப்பங்களில் திருமண பத்திரிகை உள்ளிட்ட ஆதாரங்களும் கேட்டுக்கொள்ளப்படலாம்.
கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் 48 முதல் 72 மணி நேரத்தில் வருவதாகவே பெரும்பாலான வங்கிகள் உறுதி அளிக்கின்றன. ஆனால், EMI கட்டணத்தை முன்னதாகவே கணக்கிட்டு பார்ப்பது நல்லது. பல வங்கிகளின் இணையதளங்களில் EMI கால்குலேட்டர் (EMI Calculator) வசதியிருப்பதால், அதனை பயன்படுத்தி தங்களின் செலுத்தும் திறனுக்கேற்ப தொகையை நிர்ணயிக்கலாம்.
திருமணக் கடன் என்பது பண பரிமாற்றத்தில் சுதந்திரம் கொடுக்கக்கூடிய ஒரு நிதி ஆதரவு வாய்ப்பாகும். உங்கள் செலவுகளை கட்டுப்பாட்டுடன் திட்டமிட்டு செயல்படுத்த விரும்பினால், இது ஒரு நம்பகமான தீர்வாக அமையும். முன்பே சிக்கனமாக திட்டமிடல் மற்றும் சரியான வங்கியைத் தேர்வு செய்தல் உங்கள் திருமண நிகழ்வை நிதியழுத்தமின்றி நிறைவேற்ற உதவும்.