புதுடில்லி: அமெரிக்காவின் 50 சதவீத வரியால் ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், ‘மருந்துகள், மின்னணு சாதனங்கள், பெட்ரோலியம் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு தொடரும். அதே நேரம், இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகளில் இருந்து இந்திய பொருள்கள் வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு சலுகையைப் பெற்ற இந்தியாவின் போட்டியாளர்களான வங்கதேசம், வியட்நாம், இலங்கை, கம்போடியா, இந்தோனேஷியா நாடுகளின் பொருள்களுக்கு வரவேற்பு பெருகும். இதனால், இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனர்.