புதுடில்லி: எம்.எஸ்.எம்.இ., எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தனியார் துறை வங்கிகள் முன்னணி வகிக்கின்றன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு வங்கி துறையின் கடன் அளவு கடந்த 2019ல் 10.06 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, ஆனால் கடந்த ஆண்டுக்கு இது இரட்டிப்பு அதிகரித்து 21 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தனியார் வங்கிகள் எம்.எஸ்.எம்.இ. துறைக்கு வழங்கிய கடன் அளவு மும்மடங்கு அதிகரித்துள்ளது. 2019ல் 4.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் அளவு, கடந்த ஆண்டில் 12.64 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் எம்.எஸ்.எம்.இ. கடன் அளவு 5.50 லட்சம் கோடியிலிருந்து 7.26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளே எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கும் என பொதுவாக இருக்கும் நிலையில், தற்போது தனியார் வங்கிகள் அதிக பங்கு வகிப்பது, இத்துறையில் கடன் வழங்கலில் ஏற்பட்ட மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. தனியார் வங்கிகள் விரைவாக கடன் வழங்குவதன் மூலம், பிணையில்லா கடன் மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கடன் திட்டங்களை உருவாக்கி, தங்களது கடன் வழங்கும் திறனை மேம்படுத்தியுள்ளனர் என வங்கி துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.