சென்னை: தங்க நகை கடன்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய கட்டுப்பாடுகள் தற்போது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அவசர தேவைகளுக்காக நகைகளை அடகு வைப்பது வழக்கமான நிலையாக இருந்து வந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் பெருமளவிலான புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் பெரும்பான்மையானோர் தங்கத்தை முதலீட்டாகவல்ல அவசர நிதிக் கட்டணத்தை சமாளிக்கும் பாதுகாப்பாகவே பார்க்கின்றனர். ஒரு கிராம் தங்கம் இருந்தாலும், அதனை உடனே பணமாக மாற்றும் வழி இதுவரை சுலபமாக இருந்தது. ஆனால் தற்போது, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கியதால், நகை கடன் பெறுவது கூட கடினமாகி விட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்பட வேண்டும், தங்கக் காசுகளை அடகு வைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட ஒன்பது முக்கிய கட்டுப்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் வாடிக்கையாளர்களை பெருமளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இந்த கட்டுப்பாடுகளை ஆதரித்து, பொதுமக்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள் எனக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ஒருவரின் நகை கடன் ‘நிலையான கணக்காக’ இருந்தால், வட்டி செலுத்தியவர்களுக்கு கடனை புதுப்பிக்க இயலும். இவ்வாறு செய்வது, கடன் அழுத்தத்தை குறைக்கும் வகையில் அமைந்திருக்கும் என்றும், நகைகள் ஏலத்திற்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளார்.
ஆனால், அவரது இந்த விளக்கங்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன. தமிழ்நாட்டில் தான் தங்க நகை கடன்கள் அதிக அளவில் வழங்கப்படுவதைக் குறிப்பிடும் நெட்டிசன்கள், இந்த நடவடிக்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை தாக்குவதாகவும், இது பாஜக நடத்தும் ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனோடு, கடந்த காலங்களில் கருப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் ரூ.1000, ரூ.500 மற்றும் பின்னர் ரூ.2000 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததையும் மக்கள் நினைவூட்டியுள்ளனர். அந்த நடவடிக்கைகள் மூலம் எவ்வளவு கருப்பு பணம் ஒழிக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வேதனைகள் தற்போது தங்க நகை கடன் மீதான கட்டுப்பாடுகளிலும் மீண்டும் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து, மக்கள் ஒரே குரலில் ரிசர்வ் வங்கி இவ்விதி முடிவுகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவசர நிதித் தேவைகளுக்கே தீர்வு இல்லாத சூழல் உருவாகியிருப்பதாகவும், மக்கள் நலனில் தீங்கு விளைவிக்கும் விதமாக செயல்படக்கூடாது என்றும் சமூக வலைதளங்கள் முழுவதும் கோரிக்கைகள் பரவி வருகின்றன.