நாட்டில் 500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி கண்காணிப்பு அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2024-2025 நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில் 85,711 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 2024-25ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,18,000 ஆக உயர்ந்துள்ளது. இது 37.3 சதவீத அதிகரிப்பாகும். இந்த கள்ள நோட்டுக்களின் மொத்த மதிப்பு சுமார் 5.88 கோடி ரூபாயாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையால் நாட்டின் நிதி பாதுகாப்பு மீதான சவால்கள் மீண்டும் உருவாகக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதே அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் நிகர லாபம் 27 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த லாபம் ரூ.2.7 லட்சம் கோடியாகும். இந்த லாபம் பெரும்பாலும் வட்டி வருவாய், டாலர் விற்பனை மற்றும் நிதி மேலாண்மை மூலம் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தங்கத்தின் மதிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57 சதவீதம் அதிகரித்து, தற்போது அதன் மதிப்பு ரூ.4.32 லட்சம் கோடியாக இருப்பதாகவும், மொத்தமாக 879 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பில் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கி மோசடிகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் மொத்த மதிப்பு முந்தைய நிதியாண்டில் இருந்த 12,230 கோடியில் இருந்து 2024-25 நிதியாண்டில் 36,014 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வங்கிகளின் பாதுகாப்பு முறைமைகள் குறித்து மீண்டும் சிக்கல்கள் இருப்பதை உணர்த்துகிறது.
இந்த தகவல்கள், நாட்டின் நிதி மற்றும் பாதுகாப்பு சூழலை பற்றிய முக்கிய சிந்தனைகளை ஏற்படுத்துகிறது. அரசு மற்றும் நிதி அமைப்புகள், கள்ள நோட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் கோரிக்கையாக உள்ளது.
இது போல மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய இந்த வகை நிதி அபாயங்கள், நாட்டின் மொத்த நிதி நிலையை பாதிக்கக்கூடியவை என்பதையும் அறிக்கை வெளிப்படையாக சுட்டிக்காட்டியுள்ளது.