மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானி மீது ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானி, 66, உடைய “ராகாஸ்” நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி ரூ.3,000 கோடி கடன் வழங்கியது. ஆனால் அந்த கடன் சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

விசாரணை மேற்கொண்ட சிபிஐ, அனில் அம்பானி மொத்தம் ரூ.17,000 கோடி பண மோசடி செய்துள்ளதாக 2 தனி வழக்குகள் பதிவு செய்தது. இதனிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. கடந்த மாதம், மும்பை மற்றும் டெல்லியில் உள்ள அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ரூ.2,796 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில் அனில் அம்பானி மற்றும் யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நிதி முறைகேடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கை நிதி துறையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறை வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது. அனில் அம்பானி மீதான வழக்கு அடுத்த கட்ட விசாரணையில் எந்தளவிற்கு முன்னேறும் என்பது ஆர்வத்தை தூண்டியுள்ளது.