
கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 1, 2025 முதல் அனைத்து வகையான சேமிப்பு வங்கிக் கணக்குகளிலும் சராசரி மாதாந்திர இருப்பு (AMB) தேவையைத் தள்ளுபடி செய்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், எந்தவித அபராதமும் இன்றி சேமிப்பு கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

இந்த அறிவிப்பின் மூலம் வாடிக்கையாளர்களின் வருமான நிலையை பொருத்து சந்திக்க வேண்டிய அபராதங்களும் நீக்கப்படுகின்றன. இதுவரை நகர்ப்புற கிளைகளில் ரூ.2,000, அரை நகர்ப்புற கிளைகளில் ரூ.1,000, மற்றும் கிராமப்புற கிளைகளில் ரூ.500 என்ற வகையில் AMB பராமரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இப்போது, இந்த தேவையை முழுமையாக நீக்கியதால், வாடிக்கையாளர்கள் வசதியாக தங்களின் கணக்குகளை இயக்க முடிகிறது.
பாரத ஸ்டேட் வங்கி ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு இதே மாதிரியான முடிவை எடுத்துள்ளது. இப்போது கனரா வங்கியும் அதே பாதையில் சென்று வாடிக்கையாளர்களை ஆதரிக்கிறது. இது வங்கிக் கணக்குகளை அனைவரும் சுலபமாகத் திறந்து வைத்திருக்க ஊக்குவிக்கும். குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கும் இனி வங்கி சேவைகள் ஒரு தடையின்றி கிடைக்கும்.
சராசரி மாதாந்திர இருப்பு என்பது வங்கிக் கணக்கில் ஒரு மாதம் முழுவதும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையாகும். இதைச் சரியாக பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பது பழைய நடைமுறையாக இருந்தது. ஆனால், இப்போது கனரா வங்கி அறிவித்துள்ள புதிய மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு நிதி சுதந்திரத்தையும், சேமிப்புக் கணக்கை சுலபமாக நிர்வகிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.