சென்னை: சென்னையில் இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ரூ.8,745-க்கும், பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.108க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.4,160 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய உச்சங்கள் நடுத்தர வர்க்கத்தினரை தங்கம் வாங்குவது கனவாக இருக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமும், சரிவும் ஏற்பட்டு வருகிறது. மார்ச் 16-ம் தேதி 22 காரட் தங்கம் ஒரு பவுனுக்கு ரூ. 63,120-க்கு விற்பனையானது. பின், தொடர்ந்து அதிகரித்து, புதிய அதிகபட்சமாக 3-ம் தேதி ரூ. 68,480 என புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ. 2,680 குறைந்தது. இதனால், சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

ஆனால் 5 நாள் சரிவுக்குப் பிறகு இந்த வாரம் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. நேற்று மீண்டும் ஒரு பவுன் ரூ. 68,000-யை கடந்தது. அதாவது, மார்ச் 3-ம் தேதி விற்பனை செய்யப்பட்டதைப் போலவே, தங்கத்தின் விலை நேற்று ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனையானது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலையே இதற்கு முக்கிய காரணம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 2-ம் தேதி பரஸ்பர கட்டண பட்டியலை வெளியிட்டார்.
இதில் சீன பொருட்கள் மீதான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான இந்த வர்த்தகப் போர் சுங்க வரியாக வலுவடைந்து வருகிறது. இந்நிலையில், பிற நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் டிரம்ப். எனினும் இது சீனாவிற்கு பொருந்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் சீனா மீதான பரஸ்பர வரியை 125 சதவீதமாக உயர்த்தினார். எனினும், ஷாங்காய் சந்தைகள் நேற்றும் ஏற்றத்துடன் காணப்பட்டன. இந்நிலையில் தற்போது சீன பொருட்கள் மீதான வரி 145% ஆக உயரும் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.