ஓசூர், மே 21: தமிழகத்தின் ஓசூர் நகரத்தில் அமைந்துள்ள டாடா குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில், ஐபோன் 16 மற்றும் 16e மாடல்களின் உற்பத்தி பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், இந்தியாவில் ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் மிக விரைவில் குறைந்த விலையில் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஓசூர் ஆலையில் மொபைல் போன் உற்பத்திக்கென புதிய அசெம்பிளிங் யூனிட்டைத் திறந்துள்ளது. இதுவரை, அந்த ஆலையில் ஐபோனுக்கான கேசுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முழுமையான ஐபோன் உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளன. கர்நாடகாவில் ஏற்கனவே அசெம்பிளிங் பணிகள் நடந்து வந்தாலும், தமிழகத்தில் இது முதல் முறையாகும்.
சீனாவுடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட பனிப்போர் காரணமாக, ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி தளங்களை சீனாவுக்கு வெளியே மாற்ற முயற்சி மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாகவே, டாடா குழுமம் இந்த வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முயல்கிறது.
அமேரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்கள் இங்குதான் தயாராகின்றன. அதிகரித்த வாடிக்கையாளர் தேவை காரணமாக, டாடா மற்றும் ஆப்பிள் இணைந்து உற்பத்தியை மேலும் விரிவாக்க திட்டம் வகுத்துள்ளன.
அதே நேரத்தில், டாடா குழுமம் விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரானின் இந்திய கிளைகளை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், டாடா குழுமம் ஆப்பிளின் முக்கிய உற்பத்தி கூட்டாளராக மாறியுள்ளது.
சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, டாடா நிறுவனத்தின் அணுகுமுறையால், எதிர்காலத்தில் ஐபோன்கள் ‘கையை கடிக்காத’ விலையில் இந்தியர்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தை நம்பிக்கை வெளிப்படுத்தி வருகிறது.
தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும், ஐபோன் 16 மாடல்களுக்கான அசெம்பிளிங் பணிகள் ஓசூர் ஆலையில் தொடங்கியிருப்பது பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னேற்றம், இந்தியாவை உலகளாவிய ஐபோன் உற்பத்தி மையமாக மாற்றும் வாய்ப்பையும் உருவாக்கும்.